புரட்டாசி பௌர்ணமி... கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.;

Update:2025-10-07 13:21 IST

புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி சமுத்திர தீர்த்த ஆரத்தி அறக்கட்டளை சார்பில் முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

மாலை 6.30 மணிக்கு மேளதாளம் முழங்க தேவார பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாடசாலையில் இருந்து மேளதாளத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட பரசுராம விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து சப்த கன்னிகள் பூஜை நடந்தது. அதன் பின்னர் கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. அதையடுத்து சுமங்கலி பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள்.

அதன்பிறகு வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் ஏந்தி கிழக்கு திசையில் கடலை நோக்கி ஆரத்தி காட்டி ஆராதனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சாமிதோப்பு குரு சிவச்சந்திரன் அடிகளார் தலைமை தாங்கினார். காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் பொன்காமராஜ் சுவாமிகள் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தீபம் ஏற்றி சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்