கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர அவசரமாக தரையிறக்கம்
ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 188 பேர் பயணித்தனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து இன்று காலை 9.07 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கத்தார் தலைநகர் தோஹா புறப்பட்டது. விமானத்தில் பயணிகள், விமான பணியாளர்கள் என மொத்தம் 188 பேர் பயணித்தனர்.
விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் ஏ.சி. வகுப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விமானம் மீண்டும் கோழிக்கோடு விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. காலை 11.12 மணிக்கு விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர். பின்னர், மதியம் 1.30 மணிக்கு மாற்று விமானம் மூலம் பயணிகள் கத்தார் அனுப்பி வைக்கப்பட்டனர்.