எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுங்கள்; ராகுல் காந்திக்கு பாஜக வலியுறுத்தல்
ராகுல் காந்தி ஆதாரங்களை உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.;
டெல்லி,
2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்குகளில் மோசடி நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியில் மட்டும் 1 லட்சத்து 250 வாக்குகள் முறைகேடு செய்யபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. ராகுல் காந்தி தன்னிடம் உள்ள ஆதாரங்களை உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆதாரங்களை உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்ய ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா இன்று செய்தியாளர்களிடன் கூறுகையில்,
தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குற்றச்சாடுகளுக்கான ஆதாரங்களை கொடுக்க மறுத்து உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யவும் மறுக்கிறார். ராகுல் காந்தி நீங்கள் தேர்தல் ஆணையத்தினை நம்பவில்லையென்றால் , சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துக்களை நம்பவில்லையென்றால் முதலில் உங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுங்கள். தேர்தல் ஆணையம் மீது கேள்வி எழுப்பும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தியும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.