சென்னை: ஆவடியில் மரம் சாய்ந்ததில் மின் தடை; பொதுமக்கள் அவதி
சென்னையை அடுத்த ஆவடியில் 27-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெருவில் கனமழையால் தென்னை மரம் அடியோடு சாய்ந்து மின்தடை ஏற்பட்டு உள்ளது.;
கோப்புப்படம்
ஆவடி,
வங்கக்கடலில் நேற்று உருவான 'பெஞ்சல்' புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயலை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையை அடுத்த ஆவடியில் 27-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெருவில் கனமழையால் தென்னை மரம் அடியோடு சாய்ந்தது. இதில், மின்சார கம்பி மீது மரம் விழுந்துள்ளது. தென்னை மரம் விழுந்து அமுக்கியதில், மின் கம்பம் சரிந்தது. இதேபோன்று தனியார் இணையதள கம்பமும் சாய்ந்தது. மரம் சாலையின் குறுக்கே விழுந்துள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள அந்த பகுதி மக்கள் மின்சார வசதியும் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.