விஜய் தலைமையிலான கூட்டணியை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் - டிடிவி தினகரன்

விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜகவை கழட்டி விட எடப்பாடி பழனிசாமி யோசிக்கமாட்டார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.;

Update:2025-10-11 10:53 IST

திருவண்ணாமலை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் தவெக கொடி காட்டப்பட்டது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தன் கட்சி தொண்டர்களை வைத்தே தவெக கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது. விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்குச் செல்ல பழனிசாமி தயாராகிவிட்டார் என்று. எங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும் என விஜய் சொல்கிறார். பழனிசாமி அதற்கு தயாராகிவிட்டாரா?.. விஜய் தலைமையை ஏற்கும் வகையில் அதிமுக பலவீனமாகிவிட்டதா?

விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜகவை கழட்டி விட யோசிக்கமாட்டார் எடப்பாடி பழனிசாமி. விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதற்காக, அதிமுக தொண்டர்களை வைத்து தவெக கொடியை காண்பிக்கின்றனர்” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக அரசின் மேல்முறையீடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ்நாடு காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் சிபிஐ விசாரணை தேவை இல்லை என அரசு மேல்முறையீடு செய்திருக்கும். உரிமைகளை விட்டுத்தரக் கூடாது என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இப்படி கூறுவதால் திமுகவை நான் ஆதரிப்பதாக சொல்ல வேண்டாம்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்