கரூர்: பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மரக்கிளை முறிந்து விழுந்து மாணவர் பலி
பள்ளி மாணவன் மீது மரக்கிளை முறிந்து விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
கரூர் மாவட்டம் சீத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் தென்னரசு (வயது 16) . இவர் ஏமனூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 27ம் தேதி காந்தி கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு இறுதி தேர்வு எழுதி விட்டு தனது பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கவுண்டம்பாளையம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியில் அமைந்துள்ள புளியமரம் ஒன்றின் கிளை முறிந்து மாணவரின் தலையில் விழுந்தது. இதில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மாணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவர் கரூர் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த பள்ளி மாணவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன் மீது மரக்கிளை விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.