ஏப்ரல் 30 வரை "சமத்துவம் காண்போம்" போட்டிகள்: பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்கலாம்

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 30 வரை நடைபெறும் போட்டிகளில் பொதுமக்களும், மாணவர்களும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.;

Update:2025-04-13 16:45 IST

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 ஏப்ரல் 13-ம் தேதியன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர், "வடக்கே உதித்த சமத்துவச் சூரியன், பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்" நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் நாளை "சமத்துவ நாளாக" கொண்டாடப்படுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என்று சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம் (X), படவரி (Instagram), முகநூல் (Facebook), புலனம் (WhatsApp), வலையொளி (YouTube) வாயிலாக 2025 ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 30 வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சமத்துவம் காண்போம் என்கிற முழக்கம் சமூகநீதி (Social Justice) என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தனிமனிதருக்கும், சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான, நியாயமான உறவைக் குறிக்கிறது. தனிமனிதரின் சமூகச் செயல்பாடுகளுக்குத் தேவையானவற்றை நிறைவுசெய்து, பாகுபாடற்ற நீதியையும், நியாயத்தையும் நிலைநிறுத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்மூலம் மக்கள் அனைவருக்கும் சமமான நீதி, வேலை வாய்ப்புகள், பாதுகாப்பான வாழ்க்கை ஆகியவை அமைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இப்போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்க உள்ளார். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அதிக அளவில் இப்போட்டிகளில் பங்கேற்குமாறும், தங்களது படைப்புகளை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

போட்டிகளும் அதன் விதிமுறைகளும் பின்வருமாறு:-

போட்டி 1: ஒரு கதை சொல்லட்டுமா? (Story Telling)

தலைப்பு: சமூகநீதி அல்லது கல்வியின் முக்கியத்துவம் (அல்லது) உங்களுக்குப் பிடித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் எது? என்பது குறித்துக் கதைகளைப் பதிவிட வேண்டும்.

வடிவங்கள்: ரீல்ஸ் (1 நிமிடம்) அல்லது ஒரு பக்க கதை.

போட்டி 2: ஓவியம் வரைதல் போட்டி (Drawing)

தலைப்பு: சமத்துவம் காண்போம். அளவு: 1 MB.

போட்டி 3: வினாடி - வினா போட்டி (Quiz)

தலைப்பு: அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) (அல்லது) இந்திய அரசியலமைப்பு - அடிப்படைகள் (Indian Constitution Basics).

போட்டி 4: மீம்ஸ் போட்டி (Memes)

போட்டியாளர்கள் பெண் கல்வி, சமத்துவம் அடிப்படையில் மீம்ஸ்களை உருவாக்கி அனுப்ப வேண்டும். அளவு: 1 MB.

போட்டி 5: வலையொளி (Podcast)

தலைப்பு: நான் அண்ணல் அம்பேத்கராக இருந்தால் - நீங்கள் அண்ணல் அம்பேத்கராக மாறினால் தற்போதைய உலகில் எந்தெந்த மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்? (அல்லது) அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகள் - இன்றைய காலத்திற்கேற்ப அதன் பங்கு. அளவு: 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 MB).

படைப்பாளிகள் தங்களது படைப்பினை ஒலி வடிவில் (தமிழில்) பகிர்ந்து கொள்ள வேண்டும்.

போட்டி 6: உரிமைகளுக்கான Rap பாடல் (Rap Singing)

அனைவரும் சமம் என்ற தலைப்பில் ஃப்ரீ ஸ்டைல் Rap செய்து ஒலி வடிவில் அனுப்ப வேண்டும். அளவு: 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 MB).

போட்டி 7: செல்ஃபி மற்றும் ஹாஷ்டாக் போட்டி (Selfie and Hashtag)

அண்ணல் அம்பேத்கர் சிலை அல்லது போஸ்டர்களுடன் செல்ஃபி. இந்திய அரசியலமைப்பு புத்தகத்துடன் செல்ஃபி. அரசியலமைப்பின் முன்னுரையுடன் செல்ஃபி.

#RiseforEquality என்ற ஹாஷ்டாக்குடன் பதிவுகளை உங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு, tndpr சமூக ஊடகக் கணக்கை tag செய்ய வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் பின் தொடர்பவர்களும் #Riseforequality என்ற ஹாஷ்டாக்குடன் இப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும். (அளவு: 1 MB).

போட்டி 8: சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு (Whatsapp and Instagram Outreach)

பங்கேற்பாளர்கள் தங்கள் Whatsapp status மற்றும் Instagram Story-ல் அண்ணல் அம்பேத்கரின் மேற்கோள்கள் (Quotes) அல்லது அரசியலமைப்பின் முன்னுரையைப் பதிவிட வேண்டும். அதைத் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் பகிர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான Status Screenshots பகிரப்பட்டதன் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேற்கண்ட இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் tndiprmhsamathuvamkanbom@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் கீழ்க்கண்ட விரைவு துலங்கள் குறியீடு (QR code) வாயிலாகத் தங்கள் படைப்புகளை 30.4.2025-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்