டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு டோக்கன் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.ம.மு.க. சார்பில் வரும் 14-ம் தேதி RUN FOR CHANGE என்ற பெயரில் மாபெரும் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு டோக்கன் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அ.ம.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 17 வயதுக்கு மேல், 17 வயதுக்கு கீழ் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் என்று 4 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. 17 வயதுக்கு மேல் ஆண்கள் போட்டியில் முதலிடம் பெறுவதற்கு ஒரு லட்ச ரூபாயும், பெண்கள் பிரிவில் முதலிடம் பெறுவதற்கு ரூ.75 ஆயிரமும், 17 வயதுக்கு கீழ் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு போட்டியிலும் முதலிடம் பெறுபவருக்கு ரூ.25 ஆயிரம் என வழங்கப்பட உள்ளது.
முதல் 10 இடங்களை பெறுவதற்கு பரிசு தொகையும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பிறந்த நாளின் போது கோவில்களில் வழிபாடு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்துள்ளோம். இதனை ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது மாநில மகளிர் அணி ஜீவிதா நாச்சியார், அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பூலோகபாண்டியன், அவைத்தலைவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபெருமாள், அமிர்தராஜ் பாண்டியன், நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கணபதிபாண்டியன், ஈஸ்வரபாண்டியன், விஜயபாஸ்கர், மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கிழவிபட்டி குமார்பாண்டியன், ஜெ.பேரவை மாவட்ட பொறுப்பாளர் லட்சம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.