சேலம்: 6 சவரன் தங்க நகைக்காக மூதாட்டி கொடூர கொலை- தொழிலாளி கைது
சங்ககிரி அருகே தொழிலாளி ஒருவர், கறவை மாடு வாங்கி தருவதாக கூறி மூதாட்டியை அழைத்துச் சென்று நகையை பறித்து கொலை செய்துள்ளார்.;
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுந்தம் வெள்ளையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சித்தன். இவருடைய மனைவி சின்னபொண்ணு (வயது 70). இவருக்கு மதியழகன்(55), ஆறுமுகம்(52), கோவிந்தன் ஆகிய 3 மகன்களும், சாந்தி என்ற மகளும் உள்ளனர்.
இவர்களில் கோவிந்தன் இறந்து விட்டதால் மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஏற்கெனவே சின்னபொண்ணுவின் கணவர் சித்தனும் இறந்துவிட்டார். இதனால் மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
வைகுந்தம் மற்றும் சுற்று வட்டார சந்தைகளுக்கு செல்லும் அவர் காய்கறிகளை விலைக்கு வாங்கி அதனை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி மாடு வாங்க வேண்டும் என்று அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் சின்னபொண்ணு தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மூதாட்டியை கொங்கணாபுரம் சந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு ஏழுமலை மட்டும் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். ஆனால் மூதாட்டி வரவில்லை. இதனால் அவருடைய மகன் மதியழகன் தனது தாயை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சங்ககிரி போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் முதற்கட்டமாக மூதாட்டியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
அதேநேரத்தில் மூதாட்டியை சந்தைக்கு அழைத்து சென்ற ஏழுமலை மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, மூதாட்டி சின்னபொண்ணுவை 6 சவரன் நகைக்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அதாவது, சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு கறவை மாடு வாங்குவதற்காக மூதாட்டியை ஏழுமலை அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகையை பார்த்தவுடன் அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மூதாட்டியை மாடு வாங்க அழைத்து செல்லாமல் அந்த பகுதியில் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக மூதாட்டியின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி அதனை தாரமங்கலம் அருகே பவளத்தான் ஏரியில் வீசிவிட்டு அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஏழுமலை கொடுத்த தகவலின்பேரில் பவளத்தான் ஏரிக்கு சென்ற சங்ககிரி போலீசார், அங்கு கிடந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அதற்குள் மூதாட்டி சின்னபொண்ணு உடல் இருந்ததை அறிந்து அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சங்ககிரி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தொழிலாளி ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.