தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.;
தூத்துக்குடி திரேஸ்புரம் வடக்கு கடற்கரையில் (படகு பழுது பார்க்கும் இடம்) இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசாரைக் கண்டதும் கடத்த முயன்ற நபர்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுடன் தப்பி ஓடி விட்டார்கள். இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் 40 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.