சென்னையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.;
சென்னை,
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை அமைத்து பணியாற்றி வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் மக்கள் சந்திப்பு, அரசியல் நகர்வுகளில் விஜய்யும், கட்சியின் மாநில நிர்வாகிகளும் தீவிரமாக செயலாற்றுகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, இடையில் சுற்றுப்பயணத்தில் தொய்வு ஏற்பட்டது. அதனையடுத்து காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அதேபோல் சமீபத்தில் நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், தேர்தல் களப் பணிகளை சீரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் கட்சி ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 234 தொகுதிகளில் 69 ஆயிரம் பூத் கமிட்டிகள் நியமிக்கப்பட்டு, அவர்களும் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து த.வெ.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். மேலும் தேர்தல், கட்சி தொடர்பான பணிகளை முடுக்கிவிடும் விதமாக முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவ்வப்போது செய்கின்றனர்.
இந்த நிலையில் த.வெ.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்' தளப் பக்கத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டதாக கூறப்பட்டிருக்கும் பதிவில், ‘த.வெ.க. தலைவர் அறிவுறுத்தலின்படி, 11-ந்தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலைய செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விஜய் பங்கேற்பாரா? என்பது குறித்து தகவல் இடம்பெறவில்லை. ஆனால் சமீபத்தில் கட்சியில் இணைந்த த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்குபெறுவது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.