கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் உயர் போலீஸ் அதிகாரி...யார் இந்த அஸ்ரா கார்க்

அஸ்ரா கார்க் நெல்லை எஸ்பி-யாக பொறுப்பேற்றபோது கந்துவட்டி கொடுமை அங்கு தலைவிரித்து ஆடியது.;

Update:2025-10-03 21:01 IST

சென்னை,

கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தொண்டர்களை கைது செய்வதை விட்டு விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்தநிலையில் கட்சியின் மூத்த தலைவர்களான புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருவதை அறிந்து முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜோதி ராமன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. ஆகவே முன் ஜாமீன் தர இயலாது என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வரும் நிலையில், முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் புஸ்ஸி ஆனந்த் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாயப்பு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கரூர் துயர சம்பவம் குறித்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலானய்வு குழுவினரிடம் ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அஸ்ரா கார்க் தமிழ்நாட்டில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவர் ஆவார். ஐ.ஜி.யாக உள்ளார். தற்போது தமிழ்நாடு வடக்கு மண்டலத்தின் ஐ.ஜி.யாக செயல்பட்டு வருகிறார். இந்த மண்டலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.

யார் இந்த அஸ்ரா கார்க்?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்தவர் அஸ்ரா கார்க். அவர் அங்கு பள்ளி படிப்பை முடித்தார். அதன்பிறகு தாபர் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். இவரது பெற்றோர் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள்.

காவல்துறையின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக ஐபிஎஸ் தேர்வில் 2004ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். தமிழ்நாடு கேடரில் தேர்வான இவர் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்டு இருந்த திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.

அப்போது, இவரது பணி அனைவராலும் பாராட்டும் வண்ணம் இருந்தது. பின்னர், 2008ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டார். அவர் நெல்லை எஸ்பி-யாக பொறுப்பேற்றபோது கந்துவட்டி கொடுமை அங்கு தலைவிரித்து ஆடியது. இதற்காக தனியாக ஒரு சிறப்பு படையை ஏற்படுத்தினார். இவரது அதிரடி நடவடிக்கையால் அப்போது நெல்லையில் இருந்த ரவுடிகள் அஸ்ரா கார்க்கை கண்டால் அலறி ஓடுவார்கள். அந்த அளவிற்கு காவல்துறையில் மிகவும் நேர்மையான அதிகாரி என்ற பாராட்டை பெற்றுள்ளார்.

திருநெல்வேலியில் தனது அதிரடியால் ரவுடிகளை அலறவிட்ட அஸ்ரா கார்க்கிற்கு 2010ம் ஆண்டு மதுரை மாவட்ட எஸ்பி-யாக பதவி வழங்கப்பட்டது. மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு புகார் என பல சவால்களை அதிரடியில் மிரட்டினார்.

மதுரையில் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி அதிரடி நடவடிக்கை எடுத்தார். அவரது செயலுக்கு இந்திய தேர்தல் ஆணையமே பாராட்டு தெரிவித்தது.

மதுரை உத்தபுரத்தில் இரு சமுதாயத்தினர் மத்தியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த சாதிய மோதலில் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார். நீண்ட காலமாக ஒரு சமுதாயத்தினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் அவர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுத்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது சில இடங்களில் இருந்த இரட்டைக்குவளை முறையை அடியோடு ஒழித்தார். இவர் கையாண்ட வழக்குளில் பெண் ஒருவர் தனது கணவரை கொன்றதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் தனது மகளை தனது கணவனே பாலியல் வன்கொடுமை செய்ய வந்த காரணத்திற்காகவே அந்த பெண் தற்காப்பிற்காக கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை ஐபிசி 100ன் கீழ் விடுவிக்க அஸ்ரா கார்க் உத்தரவிட்டது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும், தேனியில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞருடன் திருமணம் நடக்க இருந்த பெண்ணை கடைசி நேரத்தில் காப்பாற்றி அந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார். தனது அபாரமான திறமையான மற்றும் தைரியமான அஸ்ரா கார்க்கிற்கு பதவி உயர்வும் தேடி வந்தது. 2016ம் ஆண்டு அவர் மத்திய பணிக்கு சென்றார். அங்கு மத்திய புலனாய்வு பிரிவிற்குச் சென்ற அவர் குர்கானில் நடந்த பள்ளியில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடத்துனர் அப்பாவி என்பதையும், உண்மையான குற்றவாளி யார்? என்பதையும் தனது திறமையால் வெளியில் கொண்டு வந்தார்.

இதையடுத்து, மத்திய பணியில் அவர் இருந்தபோது அவருக்கு டிஐஜியாக 2018ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார். 2022ம் ஆண்டு ஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகிக்கும் அஸ்ரா கார்க். நேர்மையான அதிகாரியாக பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும் அஸ்ரா கார்க்கிற்கு பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையையும் இவரது தலைமையில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2021 மதுரையில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் துணிந்து செயல்பட்டதற்காக சென்னை ஐகோர்ட்டின் பாராட்டை பெற்றவர். சிபிஐ லஞ்ச வழக்கு (2019) தன்னை லஞ்சம் கொடுக்க முயன்றவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்தார்.

அஸ்ரா கார்க், மாநிலத்தில் குற்றவியல் புலனாய்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகிய துறைகளில் பணியாற்றி உள்ளார். முக்கியமான சட்ட விரோத செயல்கள், கொள்ளை, கடத்தல், பெண்கள் பாதுகாப்பு சம்பவங்களில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அஸ்ரா கார்க் பெற்ற விருதுகள்:

இவரது கடமை உணர்வை பாராட்டி சிறந்த கடமை அர்ப்பணிப்பிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் விருது, பொது சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதலமைச்சரின் காவல் பதக்கம், சிறப்பான சேவைக்கான காவல் பதக்கம், முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்