எங்களை சீண்டினால் தனிமைப்படுத்தப்படுவீர்கள்; அமெரிக்காவுக்கு சீன அதிபர் எச்சரிக்கை
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது;
பிஜீங்,
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது.
அதேவேளை, வர்த்தகப்போரை முடிவுக்குக் கொணடுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பேச்சுவார்த்தை முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது. அதன்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் அமெரிக்காவை மறைமுகமாக எச்சரித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், வர்த்தகப்போர், வரிப்போரில் யாரும் வெற்றியாளர்கள் கிடையாது. சீண்டிப்பார்த்தல், ஆதிக்கம் செலுத்த முயற்சித்தல் தனிமைப்படுத்தலுக்கே வழிவகுக்கும்' என்றார்.