ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்
ஆப்கானிஸ்தான் எல்லையில் 30 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.;
கோப்புப்படம்
இஸ்லாமாபாத்,
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலீபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
மேலும் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்த ஆப்கானிய அகதிகளை அரசாங்கம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இதனால் இரு நாடுகளின் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து இரு நாட்டு வீரர்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவல் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையின் போது, பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை ராணுவ வீரர்கள் திறம்பட கண்டறிந்ததாக ISPR தெரிவித்துள்ளது,