ரூ.60 கோடி மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை ஷில்பா ஷெட்டி ஐகோர்ட்டில் மனு

மோசடி வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறி ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ரூ.60 கோடி மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை ஷில்பா ஷெட்டி ஐகோர்ட்டில் மனு
Published on

மும்பை,

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது தொழில் அதிபர் தீபக் கோத்தாரி என்பவர் மோசடி புகார் செய்திருந்தார்.

அவர் தனது புகாரில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை தம்பதியினர் அவர்களது பெஸ்ட் டீல் டி.வி. பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தன்னை ரூ.60 கோடி முதலீடு செய்ய வைத்ததாகவும், ஆனால் அந்த தொகையை அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்கு பயன்படுத்தியதாகவும் கூறி இருந்தார். இந்த வழக்கின் விசாரணை கீழ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் தங்கள் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள ரூ.60 கோடி மோசடி வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறி மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடை செய்யவேண்டும். தங்கள் மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை தங்களுக்கு எதிராக எந்த கைது நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தம்பதியர் தங்கள் மனுக்களின் நகலை புகார்தாரர் தீபக் கோத்தாரியிடம் வழங்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com