சென்சார் விவகாரம்:சினிமாவை அரசியலாக பார்க்க கூடாது...வைரமுத்து கருத்து

ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை.
புதுடெல்லி,
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘ஜனநாயகன்' படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்துசெய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்திவைத்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் கூறியிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனக்கூறிய நீதிபதிகள் ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்சார் விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து கூறியதாவது,
சினிமாவை கலையாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக பார்க்க கூடாது. முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து தணிக்கை துறையுடன் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டும். அனைத்து படங்களுக்கும் ஒரு நிரந்தரமான விதியை வகுத்தால் எல்லா படங்களுக்கும் நிச்சயமாக தீர்வு கிடைக்கும்.என தெரிவித்துள்ளார்.






