கணவர் கொடுமைப்படுத்துவதாக இந்தி நடிகை செலினா ஜெட்லி கோர்ட்டில் வழக்கு

கணவர் கொடுமைப்படுத்துவதாக இந்தி நடிகை செலினா ஜெட்லி மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
கணவர் கொடுமைப்படுத்துவதாக இந்தி நடிகை செலினா ஜெட்லி கோர்ட்டில் வழக்கு
Published on

மும்பை,

இந்தி நடிகை செலினா ஜெட்லி (வயது47), கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரியாவை சேர்ந்த பீட்டர் ஹாக்கை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் கணவருக்கு எதிராக மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குடும்ப வன்முறை வழக்கை தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- கணவர் பீட்டர் ஹாக் என்னை உடல், மனதளவில் கொடுமைப்படுத்துகிறார். மேலும் பாலியல் ரீதியாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டி துன்புறுத்தினார். எனவே நான் ஆஸ்திரியாவில் இருந்து மும்பைக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

பீட்டர் ஹாக் சுயநலவாதி, தன்னை பற்றி மட்டுமே சிந்திப்பவர், முன்கோபக்காரர், மதுக்கு அடிமையானவர். இதன் காரணமாக தனக்கு தொடர்ந்து மனஅழுத்தம் ஏற்பட்டது. பீட்டர் ஹாக் என்னிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஆஸ்திரிய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் எனக்கு ரூ.50 கோடி ஜீவானம்சம், மாதந்தோறும் ரூ.10 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும். எனது பிள்ளைகளை பார்க்கவும் என்னை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com