கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகளை வென்ற “மஞ்சுமல் பாய்ஸ்”

சிதம்பரம் இயக்கிய ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு கேரள அரசின் 9 மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மஞ்சுமல் பாய்ஸ்’. 2024-ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இப்படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற மகத்தான சாதனையை படைத்தது. இப்படத்தின் இந்த மெர்சலான வெற்றிக்கு காரணம் தமிழ்நாட்டில் அதற்கு கிடைத்த வரவேற்பு தான். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

இந்த நிலையில், கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (சிதம்பரம்), சிறந்த திரைக்கதை (சிதம்பரம்), சிறந்த ஒளிப்பதிவு (சிஜூ காலித்), சிறந்த துணை நடிகர் (சௌபின் சாகிர்), சிறந்த கலை இயக்கம் (அஜயன் சல்லிசேரி), சிறந்த ஒலி வடிவமைப்பு (சிஜின், அபிஷேக்), சிறந்த ஒலிக்கலவை (சிஜின்,பசல்), சிறந்த பாடலாசிரியர் (வேடன்) உள்ளிட்ட 9 விருதுகள் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது.






