வருங்காலத்தில் “களம்காவல்” போன்ற நல்ல படங்களையே தருவோம் - மம்முட்டி

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ள ‘களம்காவல்’ படம் 3 நாளில் ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளது.
மூத்த நடிகரான மம்முட்டி ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய படம் ‘களம்காவல்’. நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவான ‘களம்காவல்’ படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ளனர். காவல்துறைக்குச் சவால்விடும் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.
கடந்த 5ம் தேதி இப்படம் வெளியானது. திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. மூன்று நாளில் ரூ.31 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விநாயகன் உடன் இணைந்து மம்முட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “வணக்கம். நாங்கள் இருவரும் நடித்த ‘களம்காவல்’ படத்தினை மிகப்பெரிய வெற்றிபெற செய்த அனைவருக்கு நன்றி கூறவே இங்கு வந்திருக்கிறோம். புதிய திறமைசாலிகள் பலருடன் சில அனுபவமிக்க கலைஞர்களின் கடின உழைப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள். ரசிகர்களுக்கு நன்றி. குறிப்பாக, குடும்ப ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. வரவேற்பை அளிக்கும் சமூக வலைதளம், ஊடகங்களுக்கும் நன்றி. வருங்காலத்திலும் இதேபோல் நல்ல படங்களையே தருவோம் ” என்றார்.






