செவிலியர் கனவை நனவாக்கும் தேவிகாராஜ்


செவிலியர் கனவை நனவாக்கும் தேவிகாராஜ்
x
தினத்தந்தி 18 Sep 2022 1:30 AM GMT (Updated: 18 Sep 2022 1:30 AM GMT)

தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில், நர்சிங் படிக்கும் மாணவிகளை தான் இதில் ஈடுபடுத்துகிறேன். கிராமங்களில் கல்லூரி கட்டணம் கட்ட இயலாத மாணவிகள் அதிகம் உள்ளனர். அந்த மாணவிகளின் பெற்றோர் பெரும்பாலும், விவசாயம் மற்றும் அதுசார்ந்த கூலி வேலைகளையே செய்து வருகின்றனர்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு கல்வி மட்டுமே வழி என்று உணர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவிகள் பலரும், கல்வி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் படிப்பைத் முழுமையாகத் தொடர முடியாத நிலை இருக்கும். அத்தகைய மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை அளித்து கல்வியைத் தொடர்வதற்கு உதவுகிறார் மன்னார்குடியைச் சேர்ந்த தேவிகாராஜ்.

தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், சுயமாக தொழில் செய்ய வேண்டும். அதே சமயத்தில், அது மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.

அவர் கூறியதாவது...

"2009-ம் ஆண்டு ஹோம் கேர் நர்சிங் தொழிலைத் தொடங்கினேன். இதன்மூலம் வயதானவர்கள் மற்றும் வீட்டிலேயே மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்பவர்களை கவனித்துக்கொள்ளும் செவிலியர் சேவை அளித்து வருகிறேன்.

தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில், நர்சிங் படிக்கும் மாணவிகளை தான் இதில் ஈடுபடுத்துகிறேன். கிராமங்களில் கல்லூரி கட்டணம் கட்ட இயலாத மாணவிகள் அதிகம் உள்ளனர். அந்த மாணவிகளின் பெற்றோர் பெரும்பாலும், விவசாயம் மற்றும் அதுசார்ந்த கூலி வேலைகளையே செய்து வருகின்றனர்.

அத்தகைய மாணவிகள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் பேசி, அவர்கள் கல்வி கற்க வழி செய்கிறேன். செவிலியர் கல்வியை முழுமையாக முடித்தவுடன் மாத வருமானம் அடிப்படையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறேன். அந்தப் பணத்தைக் கொண்டு கல்லூரி கட்டணம் செலுத்திய பின்பு, கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கும். இந்த முறையினால் கிராமப்புற ஏழை மாணவிகள் அதிக அளவில் பயனடைகின்றனர்.

மயிலாடுதுறையில் இருந்துதான் முதன் முதலில் செவிலியர் மாணவிகளை சேவைக்குத் தேர்ந்தெடுத்தேன். தற்போது மன்னார்குடி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் மாணவிகள் வருகின்றனர்.

கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, நர்சிங் படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் மாணவிகளையும் இந்த சேவையில் ஈடுபடுத்துகிறேன். எனது பணியைப் பாராட்டி, இந்தியா முழுவதும் 50 ஆயிரம் பெண் சுய தொழில் முனைவோர்களை கொண்ட சாதனைப் பெண்கள் அமைப்பின் விருது கிடைத்தது. இவ்வாறு கூறினார் தேவிகாராஜ்.


Next Story