அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு ஆலோசனைகள்


அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு ஆலோசனைகள்
x
தினத்தந்தி 18 Sept 2022 7:00 AM IST (Updated: 18 Sept 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

'அடர்த்தியான கூந்தல்' என்பது பல பெண்களின் ஆசைகளில் ஒன்று. ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, ஊட்டச்சத்து குறைவு போன்ற பல்வேறு காரணங்களால், பெரும்பாலான பெண்களுக்கு 'முடி உதிர்வு' பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது. இதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

முடி உதிர்வு, இயற்கையான நிகழ்வின் ஒரு பகுதியாகும். புதிய முடிகள் வளரும்போது அந்தப் பகுதியில் ஏற்கனவே இருக்கும் முடிகள் உதிர ஆரம்பிக்கும். இவ்வாறு அன்றாடம் 50 முதல் 80 முடிகள் வரை உதிர்வது இயல்பானது. இவற்றைவிட அதிகமாக முடி உதிர்ந்தால், அது கவனிக்க வேண்டிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் நலக்குறைவு, மரபு ரீதியிலான பிரச்சினைகள், தூக்கமின்மை, மன அழுத்தம், சத்தான உணவு உட்கொள்ளாதது, ஹார்மோன் கோளாறுகள் போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதுமட்டுமில்லாமல், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், புதிதாக பிரசவித்த பெண்கள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், தலை முடிக்கு அழுத்தம், இறுக்கம் தரும் வகையில் சிகை அலங்காரம் செய்துகொள்ளும் பெண்களுக்கும் அதிகமான முடி உதிர்வு ஏற்படும்.

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு வழிகள்:

 புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 இயற்கையாகவே முடியின் வேர்க்கால்களில் இருக்கும் சுரப்பிகள் எண்ணெய்யை சுரக்கும். இருந்தாலும் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் பூசுவது நல்லது.

 அடிக்கடி தலை வாரினால் முடிகள் உடைவதுடன் அடர்த்தியும் குறையும். நீங்கள் உபயோகிக்கும் சீப்பு, துண்டு, தலையணை உறை போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும். ஈரமான தலைமுடியை சீப்பு கொண்டு வாருவது கூடாது.

 வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். சருமத்தைப் போலவே தலைமுடியும் புறஊதாக் கதிர்கள் மற்றும் வாகன மாசுக்களால் பாதிக்கப்படும். எனவே அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

 மன அழுத்தம் அல்லது கர்ப்பம் போன்றவற்றால் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் முடி உதிர்வு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு தானாகவே நின்றுவிடும்.

 இறுக்கமான ஜடை, போனிடெயில் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தும் சிகை அலங்கார முறைகளை தவிர்த்தால், முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.

1 More update

Next Story