மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் திருவிளக்கு பூஜை

சன்னதியின் வாயிலில் இருக்கும் பிரம்மாண்ட சரவிளக்குகள், கதவில் உள்ள 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளினார்.
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் அய்யா வெவ்வேறு வாகனங்களில் பதிவலம் வந்தார். 8-ம் நாள் திருவிழாவில் பெண்கள் தங்கள் வீடுகளில் செய்த லட்டு, அதிரசம், பணியாரம் உள்ளிட்ட விதவிதமான பலகாரங்கள், பழம், பூக்கள் என 1,008 சீர்வரிசை தட்டுகளை செண்டை மேளம் முழங்க, ஊர்வலமாக கொண்டு வந்து அய்யாவுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.
பின்னர் சன்னதியின் வாயிலில் இருக்கும் பிரம்மாண்ட சரவிளக்குகள், கதவில் உள்ள 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் அய்யா வைகுண்ட எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் அய்யாவுக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை நடைபெற்றது. இதில் கோவில் வளாகத்தில் 1008-க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக அமர்ந்து விளக்குகள் ஏற்றி, திருக்கல்யாண ஏடு வாசிப்பை உச்சரித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பக்தர்களுடன் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.






