அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்

மலைப்பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும், மேலே உள்ள அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும்.
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்
Published on

கொங்குநாட்டில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பார்கள். அதற்கேற்ப இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கோவிலாக இந்த முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான், பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டி கோலத்தில் கையில் தண்டாயுதத்துடன் காட்சி அளிக்கிறார். 

ஒரு முறை திருக்கயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப் பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்கா தேவியை பிடிக்குமா? அல்லது பார்வதிதேவியை பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு முருகப்பெருமான், "அறன் மாதாவின் மீது தான் எனக்கு மிகுந்த ஆசை என்று கூறினார். இவ்விடத்தில் முருகப்பெருமான் கூறிய பதில் சமயோசிதமானது. அதாவது 'அறன்மாதா' என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. 'அறம் வளர்த்த நாயகி' என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் உயிர்களை காக்கும் நீர் என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார். இத்தகைய சிறப்புகளையுடைய பாலதண்டாயுதபாணி, அலகு மலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அலகுமலை கோவில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கிழக்கில் தாழ்ந்தும், மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்வதற்கு கிட்டத்தட்ட 300 படிகளை ஏறி செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் உள்ளது. இதை தாண்டி படியேறி சென்றால் எட்டு தூண்கள் கொண்ட மண்டபம் காணப்படும். இதை கடந்து சென்றால் இடதுபுறத்தில் பாத விநாயகரை தரிசிக்கலாம்.

விநாயகரை வழிபட்டு விட்டு, மேலே சென்றால் கார்த்திகை மண்டபத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதேபோன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இதற்கு அருகில் நவக்கிரகங்கள் சன்னிதியும், விநாயகர் சன்னிதியும் உள்ளன.

இதையடுத்து வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளை கடந்தால் இடதுபுறம் இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது. அடுத்ததாக குழந்தை குமரர் சன்னிதி காணப்படுகிறது. இறுதியாக, கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் கொடிமரம் அமைந்துள்ளது. கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும், அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது. கோவிலின் இடது புறத்தில் தல விருட்சமான வில்வ மரம் அமைந்துள்ளது. கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலதுபுறத்தில் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இடதுபுறத்தில் வீரபாகு தேவர் உள்ளார்.

கருவறையில் முருகப்பெருமான், சுமார் நான்கரை அடி உயரத்தில் 'முத்துக்குமார பாலதண்டாயுதபாணி' எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவர் கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண் டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார். இவரை வெள்ளிக் கவச அலங்காரத்தில் பார்க்க கண்கோடி வேண்டும் என்ற அளவுக்கு அளவுக்கு அழகு ரூபமாக ஜொலிக்கிறார். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள்.

மலைப்பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும், மேலே உள்ள அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும். மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் கி.பி.1641-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் இக்கோவிலுக்கு திருமலை நாயக்கர் திருப்பணி செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிலில் சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, கார்த்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் வழிபாடுகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு பௌர்ணமி கிரிவலம் விசேஷமாக நடத்தப்படுகிறது. தைப்பூச திருவிழா ஏழு நாட்கள் அபிஷேகங்கள், ஹோமங்கள் என வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. நிறைவு நாளில் பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி தினங்களில் விரதம் இருந்து இருந்து முருகனுக்கு செவ்வரளி மாலை சாத்தி, தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமணத் தடை நீங்கவும், தொழில் விருத்தி அடையவும் இங்கு பக்தர்கள் சிறப்பு பரிகாரங்கள் செய்கின்றனர்.

திருப்பூரில் இருந்து கொடுவாய் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டர் தூரத்தில் அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் இருந்து படிகள் வழியாகவும் கோவிலுக்கு செல்லலாம், வாகனங்கள் கோவில் வரை செல்ல சாலை வசதியும் உள்ளது.

அலகுமலை பெயர்க் காரணம்

அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். இந்த மலை, மயில் மூக்கின் வடிவம் போல் அமைந்து உள்ளதால் 'அலகு மலை' என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மலை அடிவாரத்தில் 'அழகாபுரி அம்மன்' என்ற அன்னை ஊர்க்காவல் தெய்வமாக அருள் பாலித்து வருகிறார். இதன் காரணமாக அன்னையின் பெயரே மருவி, இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். சூரியனுடன் சேர்த்து ஒன்பது கிரகங்கள், நவக்கிரகங்களாக இருப்பதுபோன்று இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்ட மலை, ஊதியூர் மலை, பழனி மலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை அழகுற காட்சியளிக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com