கோடை விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை தினம் என்பதால், இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர்.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்கள், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வார விடுமுறை என்பதாலும், இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதனால் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை செல்லக்கூடிய வரிசை என அனைத்து வழிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வரும் நிலையில், பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.