சபரிமலையில் கொட்டும் மழையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

வெள்ளப்பெருக்கால் பம்பையாற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. கோவிலில் நேற்று அதிகாலை முதல் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் வழக்கமான பூஜைகள் நடந்தன. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, வயநாடு உள்பட மலையோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. சபரிமலையிலும் கனமழை கொட்டியது.
இதன் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பம்பை ஆற்றில் புனித நீராட ஐயப்ப பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பம்பை திருவேணி பகுதியில் வாகனங்கள் நிறுத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதே சமயத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.