காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு எப்போது? அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்பு

26 கோடி ரூபாய் செலவில் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவபெருமானின் அவதார தலங்களாக விளங்கும், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம் எனும் பஞ்சபூத தலங்களில் பிருத்வி எனும் மண் தலமாக காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். பார்வதி தேவி தவம் புரிந்த மாமரம் இந்த கோவிலில் தல விருட்சமாக விளங்குகிறது.
இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு செல்கின்றனர்.
இதனிடையே, ஏகாம்பரநாதர் கோவிலில் குடமுழுக்கு நடத்த தமிழக அரசு பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, 26 கோடி ரூபாய் செலவில் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு எப்போது என்ற தகவலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று தெரிவித்துள்ளார். அதன்படி, வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்குப்பின் ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






