திருப்பரங்குன்றத்தில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

திருப்பரங்குன்றத்தில் உற்சவர் முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்
Published on

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்க சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று இரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் நவரத்தினங்கள் பொருத்திய செங்கோல் வழங்கி, சேவல்கொடி சாற்றி முருகனுக்கு கோலாகலமாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று காலையில் உற்சவர் முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்ட தேரில் எழுந்தருளினர். பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர்.

விழாவின் சிகர நிகழ்வாக, இன்று மாலையில் திருப்பரங்குன்றம் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. விழாவையொட்டி திருப்பரங்குன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com