குலசை தசரா விழா.. பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா- திரளான பக்தர்கள் தரிசனம்
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.
விரதமிருந்த பக்தர்கள் பலரும் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றிலான காப்பு அணிந்து கொண்டனர். 2-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் முத்தாரம்மன் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேசுவரர் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கூடும் என்பது ஐதீகம்.
3-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 7.30 இரவு 7.30 வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்துள்ளனர். அவர்கள் 6-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ம் திருவிழாவான 2-ந் தேதி வரை மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, மக்களிடம் இருந்து காணிக்கைகளை பெற்று கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.








