ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை.. பக்தர்கள் வழிபாடு

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னை,
தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் தனிச்சிறப்பு பெற்றவை ஆகும். ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளியில் அம்மனை வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும், குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அந்த வகையில் இன்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆடி இறுதி வெள்ளி மற்றும் விடுமுறை நாளை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்திய நிலையில், பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயிலில் நம் மாதா புவனேஸ்வரி அம்மனுக்கு இன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல புகழ்பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.






