நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: சுவாமி-அம்மன் மறுவீடு பட்டின பிரவேச வீதி உலா

மறுவீடு பட்டின பிரவேச வீதி உலாவையொட்டி பல்வேறு வகையான பலகாரங்கள் படைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: சுவாமி-அம்மன் மறுவீடு பட்டின பிரவேச வீதி உலா
Published on

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கோவிலில் இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்மனுக்கு காலையிலும், இரவிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 14-ந் தேதி நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள கம்பாநதியில் தவம் இருந்த காந்திமதி அம்மனுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தார்.

15-ந்தேதி அதிகாலையில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சுவாமிக்கும்- அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்மன் பூம்பல்லக்கில் பட்டினப்பிரவேசம் வீதி உலா நடந்தது. அதன் பிறகு நேற்று முன்தினம் வரை அம்மன் ஊஞ்சல் திருவிழா நடந்தது.

இந்த நிலையில் திருக்கல்யாணம் வைபவம் நடந்து 5 நாட்களானதால் நேற்று சுவாமி, அம்மன் மறுவீடு பட்டின பிரவேசம் வீதி உலா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு வகையான பலகாரங்கள் படைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

காலை 10-30 மணிக்கு சுவாமியும், அம்மனும் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க மறுவீடு பட்டின பிரவேசம் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வீதி உலா முடிந்து சுவாமியும் அம்மனும் கோவிலுக்கு வந்தவுடன் சிறப்பு தீபாராதனையுடன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com