பிரதோஷ வழிபாடு: எந்த மாதத்தில் என்ன நைவேத்யம் படைக்கலாம்?

ஆனி மாத பிரதோஷ வழிபாட்டின்போது தேனும் தினைமாவும் கொண்டு சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
சிவ வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான நாள் பிரதோஷம் ஆகும். பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு சிறப்பு பெற்ற பிரதோச வழிபாட்டில் இறைவனுக்கு படைக்கக்கூடிய நைவேத்யம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பிரதோஷ பூஜையில் சிவபெருமானுக்கு படைக்கும் நைவேத்யம் மற்றும் அதனால் ஏற்படும் பலன்களை பார்ப்போம்.
சித்திரை: இந்த மாதத்தில் வருகிற பிரதோஷ நாட்களில் நீர்மோரும், தயிர் சாதமும் இறைவனுக்கு நிவேதனம் செய்து, நிவேதிக்கப்பட்ட நீர்மோரையும், தயிர் சாதத்தையும் விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- மூலம், பவுத்திரம், சூடு, எலும்புருக்கி போன்ற நோய்கள் நீங்கும்.
வைகாசி:- பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் அகன்றுவிடும்.
ஆனி:- தேனும் தினை மாவும் கொண்டு ஈசனார்க்கு நிவேதனம் செய்யப்பட வேண்டும்.
பலன்:- மலட்டுத் தன்மை நீங்கும்.
ஆடி:- வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து அதை எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து பின்தானம் செய்ய வேண்டும்.
பலன்:- கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
ஆவணி:- தயிரன்னம் நிவேதிக்கப்பட்டுத் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- காரியத்தடைகள் நீங்கும். நோய் வாய்ப்பட்டவர் அந்நோயினின்றும் மீண்டும் சுகம் பெறுவர்.
புரட்டாசி:- சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும் நிவேதிக்கப்பட்டு தானம் புரிதல் வேண்டும்.
பலன்:- அரிப்பு, தடிப்பு, விஷக்கடி பாதிப்பு போன்ற தொல்லைகள் நீங்கும்.
ஐப்பசி:- உளுந்து வடையும், இனிப்புப் பண்டமும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்தல் வேண்டும்.
பலன்:- சீதள நோய் விலகும்.
கார்த்திகை:- எலுமிச்சை சாதமும், தேங்காய் சாதமும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்திடல் வேண்டும்.
பலன்:- பெண்களுக்குரிய கர்ப்ப சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் அடி வயிற்றில் இருந்து தொடைப் பகுதி வரையிலான நோய்கள் நீங்கும்.
மார்கழி:- வெண் பொங்கலும், கடலை சுண்டலும் இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம் செய்யப்பட வேண்டும்.
பலன்:- மஞ்சள்காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.
தை:- தயிர் ஏட்டில் தேன் சொரிந்து இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் அளிக்கப்பட வேண்டும்.பலன்:- கபத்தால் வரும் வியாதிகள் நீங்கும்.
மாசி:- நெய்யுடன் கலந்து ஈசனார்க்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்ய வேண்டும்.
பலன்:- மாந்தம், வயிறு உப்புசம், சிறுநீரகக் கோளாறு ஆகியன தீரும்.
பங்குனி:- தேங்காய்ச் சாதமும், தக்காளிச் சாதமும் பெருமானுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்ய வேண்டும்.
பலன்:- பித்தம், மனநல பாதிப்பு போன்ற நோய்கள் நீங்கும்.






