மதநல்லிணக்க விநாயகர் ஊர்வலம்: மும்மதத்தினர் பங்கேற்பு

முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம் கருப்பம்புலம் வடகாடு மருதம்புலம் ஏரியை சென்றடைந்ததும் ஏரியில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் தெற்குகாடு பகுதியில் காசி விஸ்வநாதா் சிற்றம்பலம் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 33 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியையொட்டி நடத்தப்படும் விநாயகர் ஊர்வலத்தை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பங்கேற்கும் மத நல்லிணக்க நிகழ்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தோப்புத்துறை ஜமாத்தைச் சேர்ந்த சுல்தான் மரைக்காயர், சோட்டா பாய், ரபீக், கடிநெல்வயல் பங்கு தந்தை ஜான் கென்னடி, பள்ளி தாளாளர் நித்திய சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து தேங்காய் உடைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம் கருப்பம்புலம் வடகாடு மருதம்புலம் ஏரியை அடைந்ததும், ஏரியில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கனகராஜ், சிவப்பிரகாசம், போஸ், விஜயபாலன், விஜயராகவன், அர்ச்சுனன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






