திருமலை தெப்போற்சவம்.. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய பகவான் கிருஷ்ணர்

கடைசி 3 நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பால்குண மாதத்தில் சுத்த ஏகாதசி அன்று தொடங்கும் தெப்போற்சவம் பால்குண பவுர்ணமி நாளில் முடிவடைகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது.
கோவில் அருகில் உள்ள புண்ணியத் தீர்த்தமான ஸ்ரீவாரி புஷ்கரணியில் மிதக்கும் தெப்பத்தேரில் பகவான் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
பகவானின் ராமாவதாரத்துடன் தெப்போற்சவம் தொடங்கியது. அதாவது, முதல் நாளில் ராமபிரான், சீதா தேவி, லட்சுமணர் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 2-வது நாளான நேற்று கிருஷ்ணர், ருக்மணி தேவி தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விமரிசையாக நடைபெற்று வரும் தெப்போற்சவம் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. கடைசி 3 நாட்களும் (மார்ச் 11 முதல் 13 வரை) உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி முறையே 3, 5 மற்றும் 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.






