பிரம்மோற்சவ விழாவில் இன்று கருட சேவை... திருப்பதியில் குவியும் பக்தர்கள்

திருப்பதி மற்றும் திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் பார்க்கிங் வசதிகளை அறிந்துகொள்ள ஆங்காங்கே ‘கியூ ஆர்’ கோடு வைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை கருடசேவை (தங்கக்கருட வாகன வீதிஉலா) நடக்கிறது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஏற்கனவே மாட வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள நிலையில், பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து வருவதால், கருட சேவையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பதி மற்றும் திருமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருட சேவையை முன்னிட்டு திருப்பதி மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இஸ்கான் கோவில் வளாகம், தேவலோக் பிராங்கணம், அலிபிரி பஸ் நிலையம், எஸ்.வி. என்ஜினீயரிங் கல்லூரி, மாங்காய் மண்டி, திருமலையில் ராம்பகீச்சா தங்கும் விடுதி (மிக முக்கிய வி.ஐ.பி. வாகனங்கள்), சப்தகிரி தங்கும் விடுதி (வி.ஐ.பி. வாகனங்கள்), பொது பக்தர்களின் வாகனங்கள் திருமலையில் உள்ள வெளிவட்டச் சாலையில் நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
திருப்பதி மற்றும் திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் பார்க்கிங் வசதிகளை அறிந்துகொள்ள ‘கியூ ஆர்’ கோடு வைக்கப்பட்டுள்ளது. கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் ‘வாகனங்கள் எந்த வழியாகச் சென்று வாகன நிறுத்தங்களை அடையலாம்’ என்ற தகவலை தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களில் திருமலைக்கு பயணிக்க வேண்டும், என ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருடசேவையால் திருப்பதி நகரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலிபிரி-கபிலத்தீர்த்தம் பாதையில் தனியார் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தனியார் வாகனங்கள் மட்டும் ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் நிறுத்தப்பட வேண்டும். திருப்பதியில் முக்கிய சாலைகளில் தெரு வணிகம் தடை செய்யப்பட்டுள்ளது. அவசர ஊர்திகளுக்காக முன்னுரிமை அடிப்படையில் பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
போலீஸ் குவிப்பு
மேலும் பக்தர்களை ஒழுங்குப்படுத்தவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை துறை ஊழியர்கள், ஆந்திர மாநில போலீசார், துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படைவீரர்கள் அதிகளவில் திருமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். திருமலை முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






