விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் வலம் வந்தார்.
விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலையில் திருப்பல்லக்கிலும், இரவில் ஒவ்வொரு வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். இந்த தேர், கோவிலின் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து, சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.