2025-ல் இதுவரை இந்திய விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவு - மத்திய அரசு தகவல்


2025-ல் இதுவரை இந்திய விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவு - மத்திய அரசு தகவல்
x

‘ஏர் இந்தியா’ நிறுவனம் 85 முறை தொழில்நுட்பக் கோளாறுகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகோல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நடப்பாண்டு ஜூலை 21 வரை இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக விமான ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்துள்ளன. இதில் 'ஏர் இந்தியா' நிறுவனம் 85 முறை தொழில்நுட்பக் கோளாறுகளை பதிவு செய்துள்ளது.

'இண்டிகோ' மற்றும் 'ஆகாசா ஏர்' ஆகிய நிறுவனங்கள் முறையே 62 மற்றும் 28 முறையும், 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் 8 முறையும் தொழில்நுட்பக் கோளாறுகளை பதிவு செய்துள்ளன. விமான நிறுவனங்கள் தெரிவித்த புகார்கள் தொடர்பாகவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டில், இந்திய விமானங்களில் பதிவான தொழில்நுட்பக் கோளாறுகளின் எண்ணிக்கை 514 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 528 ஆகவும், 2023-ல் 448 ஆகவும், 2024-ம் ஆண்டில் 421 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story