காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது

காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனில் உள்ள பல்கலைக்கழக போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சுனிதா என்ற பெண், வேலைக்கு செல்வதற்காக கடந்த மாதம் 22-ந் தேதி அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற கல்லப்பாவும், சந்தோசும் லிப்ட் கொடுப்பது போல் நடித்து ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி சுனிதா அணிந்திருந்த தங்க தாலியை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து உடனடியாக சுனிதா பல்கலைக்கழகம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினர். இதில் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது கலபுரகி மாவட்டம் அப்சல்புராவை சேர்ந்தவர் கல்லப்பா என்ற சஞ்சு பூஜாரி (வயது 24). தொழிலாளியான இவரும், ஒரு இளம் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் அவர் சம்பாதிக்கும் பணம் அவர்களது அன்றாட செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. மேலும் அவர் வீட்டு செலவுகளை பூர்த்தி செய்ய அவரது வேலை முடிந்தவுடன் பகுதி நேரமாக ஆட்டோவும் ஓட்டி வந்துள்ளார். பின்னர் அவரது தேவைகள் அதிகரிக்கவே அதனை நிவர்த்தி செய்யவும், தனது காதலியுடன் ஆடம்பரமாக வாழ்வதற்கும், தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் சேர்ந்து திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் மீது கலபுரகி பல்கலைக்கழக போலீஸ் எல்லைக்குள் 5 வீடுகளில் கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அத்துடன் திருடிய பொருட்களை கல்லப்பா தனது காதலியிடம் கொடுத்து விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. கைதான 2 பேரிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 680 கிராம் வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com