16 ஆண்டுகளுக்கு பின்... முன்பே தொடங்கிய தென்மேற்கு பருவமழை

கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,
மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று முன்தினம் தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து சென்றது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுப்பெற்று உள்ளது. இது தொடர்ந்து, கிழக்கு திசை நோக்கி நகர்கிறது என்றும் இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இதன்படி ரத்தினகிரிக்கும், டபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற அளவிலேயே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 28-ந்தேதி வரை மித அளவிலான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று, கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இதனையொட்டி, கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடப்படுகிறது என இன்று காலை அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள மற்றொரு செய்தியில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது. பொதுவாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
இந்நிலையில், 8 நாட்களுக்கு முன்பாக மே 24-ந்தேதியே (இன்று) கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என தெரிவித்து உள்ளது. 2009-ம் ஆண்டில், மே 23-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதற்கு 16 ஆண்டுகளுக்கு பின்னர், முதன்முறையாக கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






