அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம்: வர்த்தகத்துறை செயலாளர் தகவல்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
புதுடெல்லி,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து இந்தியா மீது 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி மேலும் 25 சதவீதம் என 50 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பை குறைக்க இரு தரப்பினர் இடையே தொடர்ந்து வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தநிலையில் இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடையும் நிலையில் உள்ளதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்படும் என வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதன்மூலம் 50 சதவீத வரிவிதிப்புக்கு தீர்வு காணப்படும்” என்றார்.
2026-ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து சமையல் எரிவாயு இறக்குமதி செய்யவும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஓர் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. இதுகுறித்து அவர், “இது நீண்டகாலமாக பேச்சுவார்த்தையில் உள்ள ஒன்று. இது இருதரப்பு வர்த்தக உறவுக்கான பகுதியாக இல்லை. இருப்பினும் இருநாடுகளிடையேயான வர்த்தக உறவை சமப்படுத்த நமது முயற்சியின் ஒரு பகுதி” என்றார்.






