பீகார் சட்டசபை தேர்தல்; ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு வெளியீடு

ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டு உள்ள கருத்துக்கணிப்பு முடிவில், என்.டி.ஏ. 131 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற முடிவானது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இதன் பின்னர், முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு சாவடிகளை கைப்பற்றுதல், சூறையாடுதல் போன்ற பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் நேற்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. எனினும், பீகார் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 68.52 சதவீதம் பதிவாகி உள்ளன என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், வெற்றி பெறும் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் நிலவரம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. எனினும், 14-ந்தேதி வெளிவரும் முடிவே இறுதியானது. 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்.
இதில், ஆக்சிஸ் மை இந்தியா இன்று வெளியிட்டு உள்ள கருத்துக்கணிப்பு முடிவில், என்.டி.ஏ. 131 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 108 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜன சுராஜ் கட்சி 1, மற்ற கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், என்.டி.ஏ. கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று பீகாரில் ஆட்சியமைக்கும் என்ற வகையில் பரவலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.






