செல்லப்பிராணி நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினம்; பிரியங்கா காந்தி

தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
டெல்லி,
நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் நேற்றைய விசாரணையின்போது, தெருநாய்கள் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் என அனைத்து தரப்பினரையும் குறிவைக்கின்றன. தெருநாய் கடியால் பச்சிளம் குழந்தைகள் உள்பட பலருக்கும் ரேபிஸ் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், தலைநகர் டெல்லியில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்.
தற்போதைக்கு அடுத்த 8 வாரங்களுக்குள் 5 ஆயிரம் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதற்காக டெல்லி யூனியன் பிரதேச நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை அடைத்து வைப்பதற்கான காப்பகங்களை அதிகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும்,அதிகாரிகள் தெருநாய்களை பிடிப்பதற்கு எதிராக தனிநபர்களோ, அமைப்புகளோ குறுக்கே வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
நகரில் உள்ள அனைத்து தெருநாய்களையும் சில வாரங்களில் காப்பகங்களில் அடைப்பது தெருநாய்களை கொடூரமான மனிதாபிமானமற்ற முறையில் நடத்த வழிவகுக்கும். தெருநாய்களை அடைக்க போதிய காப்பகங்கள் இல்லை.
நகர்ப்புற சூழலில் உள்ள தெருநாய்கள் மோசமான முறையில் நடத்துதல் மற்றும் மிருகத்தனத்திற்கு ஆளாகின்றன. இந்த விவகாரத்தை கையாள சிறந்த வழிகள் உள்ளன.
தெருநாய்களை கவனித்து பாதுகாக்க மனிதாபிமான வழிகளை காணலாம். செல்லப்பிராணி நாய்கள் மிகவும் அழகான, மென்மையான உயிரினம். அந்த செல்லப்பிராணி நாய்களுக்கு இத்தகைய கொடூர செயலை செய்ய வேண்டாம்
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.






