வரதட்சணை கொடுமை: திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா கட்டினகாரு அருகே எடமனே கிராமத்தை சேர்ந்தவர் மாலாஸ்ரீ (வயது 23). இவருக்கும் சிவமொக்கா தாலுகா கும்சி போலீஸ் எல்லைக்குட்பட்ட குரம்பள்ளி அருகே கூஜானுமக்கி கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கணவருடன் கூஜானுமக்கி கிராமத்தில் மாலாஸ்ரீ வசித்து வந்தார். திருமணத்தின்போது மாலாஸ்ரீயின் பெற்றோர் நகை, பணம், பொருட்கள் என வரதட்சணையாக கொடுத்தனர்.
இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு அசோக் மற்றும் அவரது பெற்றோர் மாலாஸ்ரீயை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கடந்த மாதம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்ற மாலாஸ்ரீயை சமாதானப்படுத்தி அசோக் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் அதன்பிறகும் வரதட்சணை கேட்டு மாலாஸ்ரீயை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாலாஸ்ரீ, நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாலாஸ்ரீயின் பெற்றோர், தனது மகளின் சாவுக்கு கணவர் அசோக், அவரது பெற்றோரே காரணம் என்று கும்சி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கும்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலாஸ்ரீயின் கணவர் அசோக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






