வன்முறையை ஒருபோதும் தேர்தல் கமிஷன் பொறுத்து கொள்ளாது; தலைமை தேர்தல் கமிஷனர்


வன்முறையை ஒருபோதும் தேர்தல் கமிஷன் பொறுத்து கொள்ளாது; தலைமை தேர்தல் கமிஷனர்
x

வன்முறையை ஒருபோதும் தேர்தல் கமிஷன் பொறுத்துக் கொள்ளாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்க இன்னும் சில நாட்களே உள்ளன. ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் வேகம் எடுத்து வரும் அதே வேளையில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவை நடத்த தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் வேகப்படுத்தி வரும் சூழலில், ஜன்சு ராஜ் கட்சியின் ஆதரவாளராக அறியப்படும் துலர்சந்த் யாதவ் என்பவர் கொலை வழக்கில் மொகாமா தொகுதி ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான அனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார்.

பிரபல தாதாவாக அறியப்படும் இவர் ஆளுங்கட்சி வேட்பாளர் மட்டுமின்றி, தற்போதைய எம்.எல்.ஏ. நீலம் தேவியின் கணவரும் கூட. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நிருபர்களிடம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறியதாவது:-

தேர்தல் நடவடிக்கைகளில் அனைவரும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். ஓட்டுபோடும் உரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். வன்முறையை தேர்தல் கமிஷன் ஒருபோதும் சகித்து கொள்ளாது. வாக்காளர்கள் அமைதியான முறையில் ஓட்டு போட முடியும் என்பதை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய தயாராகவே உள்ளது.

மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் பார்வையாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த பணியில் தீவிரமாக உள்ளனர். பீகாரில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தல் சட்டம் மற்றும் ஒழுங்கு கட்டமைப்பின் கீழ் முற்றிலும் அமைதியான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்படும்’ இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story