புதுச்சேரியில் எலக்ட்ரிக் பஸ் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் அல்லாது வெளியில் இருந்து தற்காலிக பணிக்கு ஓட்டுநர்கள் தேர்வாகி இருந்தனர்.
புதுச்சேரி,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பஸ்களை கடந்த அக்.27-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இயக்கி வைத்தனர். புதுச்சேரியின் கிராமப்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டதால் பொதுமக்களிடையே எலக்ட்ரிக் பஸ்சிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், ஊதிய நிரந்தரம், தமிழகத்தில் மின்சார பஸ் ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தினப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மின்சார பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் பஸ்களை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின்சார பஸ்களை இயக்குவதற்காக அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் தவிர, வெளியில் இருந்து தற்காலிக பணியாளர்களாக 75 ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மாதம் ரூ.21,000 ஊதியம் என கூறப்பட்ட நிலையில், பிடித்தம் போக ரூ.17,000 மட்டுமே வழங்கப்பட்டதாக ஓட்டுநர்கள் கூறினர். மின்சார பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டு 10 நாள்களே ஆன நிலையில் ஊதிய நிரந்தரம் கோரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருது புதுச்சேரி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






