2 மகள்களுடன் கால்வாயில் குதித்து தொழிலதிபர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

மகள்களுடன் தீரஜ் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேர்ந்தவர் தீரஜ் ரபாரி. தொழிலதிபரான இவருக்கு திருமணமாகி ஜான்வி, ஜியா என இரு மகள்கள் இருந்தனர்.
இந்நிலையில், தீரஜ் ரபாரி நேற்று முன் தினம் மாலை தனது மகள்களை காரில் அழைத்துக்கொண்டு ஆதார் கார்டு எடுக்க செல்வதாக புறப்பட்டுள்ளார். ஆனால், மாலை வெகுநேரமாகியும் மகள்களுடன் தீரஜ் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தீரஜ் தனது நண்பருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்துவிட்டு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, கால்வாயில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், தீரஜ் மற்றும் அவரது 2 மகள்களையும் கால்வாயில் இருந்து சடலமாக மீட்டனர். 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மகள்களுடன் தீரஜ் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






