'எல்.கே.அத்வானி ஜின்னாவை பாராட்டினார்' - நேருவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

பிரதமர் மோடி வரலாற்றை திரித்து கூறுவதில் வல்லவர் என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

புதுடெல்லி,

நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவையில் இல்லை. முதலில் நேருவும், தற்போது ராகுல் காந்தியும் வந்தே மாதரத்தை புறக்கணித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தேசியப் பாடலை அவமதித்தது. வந்தே மாதரத்தில் சமரசம் செய்து கொண்டு, முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்தது. நேரு வந்தே மாதரத்தை துண்டு துண்டாக உடைத்தார் என்று விமர்சித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

நேரு திருப்திப்படுத்தும் அரசியலை செய்தார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் வரலாற்றை திரித்து கூறுவதில் வல்லவரான பிரதமர் பின்வரும் கேள்விகளுக்கான பதில் தெரியுமா?

1. 1940-ம் ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானத்தை கொண்டு வந்த நபருடன் 1940-களின் முற்பகுதியில் வங்காளத்தில் கூட்டணி அமைத்த இந்தியத் தலைவர் யார்? சியாமா பிரசாத் முகர்ஜி.

2. ஜூன் 2005-ம் ஆண்டு கராச்சியில் ஜின்னாவை பாராட்டிய இந்திய தலைவர் யார்? எல்.கே.அத்வானி.

3. தனது புத்தகத்தில் ஜின்னாவை புகழ்ந்த இந்திய தலைவர் யார்? ஜஸ்வந்த் சிங்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com