நகைக்கடை அதிபரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்

அசோகனை தீ வைத்து எரித்துக்கொன்ற துளசி தாசன் போலீசில் சரணடைந்துள்ளார்.
நகைக்கடை அதிபரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ராமாபுரத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 55). இவர் ராமாபுரம் பஸ்நிலையம் அருகே நகைக்கடை நடத்தி வந்தார்.

இதனிடையே, அசோகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த துளசி தாசனுக்கும் இடையே பணப்பிரச்சினை இருந்துள்ளது.

இந்நிலையில், துளசி தாசன் நேற்று அசோகனின் நகைக்கடைக்கு வந்துள்ளார். அங்கு அசோகனிடம் தனக்கு தரவேண்டிய பணத்தை தரும்படி கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த துளசி தாசன் தான் மறைத்து கொண்டுவந்த பெட்ரோலை அசோகன் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அசோகன் அலறி துடித்துள்ளார்.

அசோகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். பின்னர், உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அசோகனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். அதேவேளை, தீ வைத்த துளசி தாசன் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

கோட்டயம் மருத்துவமனையில் 80 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அசோகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேவேளை, அசோகனை தீ வைத்து எரித்துக்கொன்ற துளசி தாசன் போலீசில் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.   

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com