சமூக, அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் முத்துராமலிங்கத் தேவர் - பிரதமர் மோடி புகழாரம்

கோப்புப்படம்
மாபெரும் ஆளுமையான முத்துராமலிங்கத் தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்குப் புனிதமான குரு பூஜையின்போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.
கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






