முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை வழக்கம் போல கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் பதாகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதி காக்குமாறும், கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறும் ஓம் பிர்லா பலமுறை வேண்டுகோள் விடுத்தார்.
எனினும், அவரது வேண்டுகோளை ஏற்காத சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து அவை கூடியதும், கர்நாடக இட ஒதுக்கீடு விவகாரம் எதிரொலித்தது. இது தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, ராஜ்யசபாவிலும், கர்நாடகா விவகாரம் எதிரொலித்தது. அதாவது கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அம்மாநில அரசின் முடிவு குறித்து மல்லிகார்ஜுன் கார்கே விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். இதனால் ஏற்பட்ட அமளியை அடுத்து, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.






