ட்ரூத் சமூகவலைதளத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன் பிரதமர் மோடி 16-ம் தேதி 3 மணிநேரம் கலந்துரையாடினார். அப்போது, 'டிரம்ப் துணிச்சலானவர்; சுயமாக முடிவெடுப்பவர்' என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். இக்கலந்துரையாடல் காணொலியை டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக கணக்கில் நேற்று பகிர்ந்தார்.
இந்நிலையில், இந்த சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். தனது முதல் பதிவாக, 'ட்ரூத் சோஷியலில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் காலங்களில் இத்தளத்தில் உணர்ச்சிகரமான குரல்களுடன் கலந்துரையாடவும், ஆக்கபூர்வ உரையாடல்களில் ஈடுபடவும் எதிர்பார்ப்புடன் உள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது கலந்துரையாடல் காணொலியை பகிர்ந்த டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட மற்றொரு பதிவில், 'எனது நண்பர் ஜனாதிபதி டிரம்ப்புக்கு நன்றி. எனது வாழ்க்கைப் பயணம் இந்தியாவின் நாகரிக கண்ணோட்டம், உலகளாவிய பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியுள்ளேன்' என்று அதில் கூறியுள்ளார்.






